மதுரை எய்ம்ஸ்… பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதற்காக சில குழுக்களும் அமைக்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கவில்லை. அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, மதுரையில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இது தான் என உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதையடுத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைந்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து நடத்துமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பணிகளை செயல்படுத்த நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கு முழு அதிகாரங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.