முதல்வராக நடிக்க தயார்: நடிகர் சூர்யா ஓபன் டாக்!
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பயோபிக்கில் நடிக்க நடிகர் சூர்யா விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பயோபிக்கில் நடிக்க நடிகர் சூர்யா விருப்பம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருப்பவர். அதனால் இவர் படங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கோணங்களில் இருக்கும். தற்போது சூர்யா இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 31 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யா பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘சூரரைப் போற்று படம் முழுமையான வாழ்க்கை வரலாற்றுப் படமல்ல. அதில் சில மாற்றங்களைச் செய்துள்ளோம். ஆயுத எழுத்து படத்திலிருந்தே எனக்கு சுதா கொங்கராவை தெரியும். என் சகோதரியைப் போன்றவர். இந்த படத்திற்காக அவர் மூன்று ஆண்டுகள் காத்திருந்தார்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை நல்ல திரைக்கதையாக உருவாக்கிய பின் என்னைத் தொடர்பு கொண்டால், அவருடைய கதாபாத்திரத்தில் நான் நிச்சயம் நடிப்பேன்’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்., 151 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதல் முறையாக முதல்வராகியுள்ளார். இவர் நாளை விஜயவாடாவில் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.