பாஜகவில் இணைய போகிறேனா? சந்தானம் விளக்கம்
சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் “பிஸ்கோத்” படம் பார்த்த ரசிகர்களை நடிகர் சந்தானம் நேரில் சந்தித்தார். தொடர்ந்து சென்னை பிரசாத் லேபில் பிஸ்கோத் படக்குழுவினருடன் நடிகர் சந்தானம் செய்தியாளர்களை சந்தித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சந்தானம். “தமிழ்நாடு ரசிகர்களுக்கு 2 கைக் கூப்பி நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய படம் திரையரங்கில் வெளியாகியிருப்பது வளர்ந்து இளம் இயக்குனர், தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறது. ரசிகர்கள் முன்னெச்சரிக்கையுடன் படம் பார்க்க வேண்டும், அரசு கூறியுள்ள விதிமுறையை பின்பற்ற வேண்டும். பொது மக்கள் முக கவசத்தை முறையாக அணிய வேண்டும்.
கொரோனா பாதிப்பு குறைந்தால் திரையரங்கில் 50 சதவீத இருக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்தால் கூட முக கவசம் அணிவது, சானிடைசர் உபயோகிப்பதை தொடர்ந்து மக்கள் பயன்படுத்த வேண்டும். வரும் தலைமுறைக்கும் இந்த பழக்கத்தை கற்று கொடுத்தால் எந்த வைரஸூம் நம்மை தாக்காது. நான் பாஜகவில் இணைவதாக தகவல் பரவி வருகிறது. இது பிஸ்கோத் படத்தை விட பெரிய காமெடியாக உள்ளது. இந்த தகவல் பொய்யானது. அப்படியான எண்ணம் எனக்கு இல்லை. சூழ்நிலையை பொருத்து நடிகர்களின் சம்பளம் குறைக்க முடியும். மக்களுக்கு பிடித்த படங்களை எடுத்தால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும்” எனக் கூறினார்.