கஜா புயல் பாதிப்பு: சகோதர சகோதரிகளுக்கு உதவ பாலிவுட் நடிகர் ஆமிர்கான் வலியுறுத்தல்!
கஜா புயல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவுவோம் என பாலிவுட் நடிகர் ஆமிர்கான் வலியுறுத்தியுள்ளார்.
மும்பை: கஜா புயல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவுவோம் என பாலிவுட் நடிகர் ஆமிர்கான் வலியுறுத்தியுள்ளார்.
சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த நவ.15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். டெல்டா மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப திரையுலகினரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், ஆமிர்கான் உள்ளிட்டோரிடம் கஜா புயல் பாதிப்புக்கு உதவ முன் வருமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் என நடிகர் ஆமிர்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
Thank you so much @aamir_khan Ji. In many ways people like you make us feel it is truly “One Country”. https://t.co/ejaEYQyAEf
— Kamal Haasan (@ikamalhaasan) November 30, 2018
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பேரழிவை அறிந்து வேதனையடைந்தேன். அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவ வேண்டும். நம்மால் முடிந்த முயற்சிகளையும், பங்களிப்பையும் வழங்க வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.