‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை’ : பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை!
தேரி மேரி லவ் ஸ்டோரிஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளதோடு, சில படங்களிலும் நடித்துள்ளார்.
மும்பை: பிரபல டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான குஷால் பஞ்சாபி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘ஃபியர் ஃபேக்டார்’ ரியாலிட்டி தொலைக்காட்சியில் பங்கேற்றவர் குஷால் பஞ்சாபி. 42 வயதாகும் இவர் சிஐடி, தேரி மேரி லவ் ஸ்டோரிஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளதோடு, சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் குஷால் பஞ்சாபி மும்பை ஆண்ரூஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள போலீசார், குஷாலின் பெற்றோர் அவருக்கு பலமுறை போன் செய்துள்ளனர். அவர் போனை எடுக்காததால் நள்ளிரவு 2 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்த போது அவர் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதையடுத்து எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தற்கொலை செய்வதற்கு முன் குஷால் ஒன்றரை பக்க கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. எனது சொத்துகளை பெற்றோர், உடன்பிறந்தோர் சரிசமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறியுள்ளனர்.
இதனிடையே குஷால் பஞ்சாபி தற்கொலை செய்தி பாலிவுட் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.