அவர் படப்பிடிப்பில் என்னை அவமானமாக நடத்தினார்… நடிகை மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்!
ஸ்ரீகுமார் மேனன் மீது வழக்குப்பதிவு செய்த திருச்சூர் கிழக்குப் போலீசார் இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.
நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் ஒடியன் பட இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிராக, கேரள காவல்துறை தலைமை அதிகாரி லோக்நாத் பெஹேராவிடம் புகார் கொடுத்தார். அவர் அளித்த மனுவில், இயக்குநர் ஸ்ரீகுமார் தன்னையும், தந்து நண்பர்களையும் சமூக வலைதளங்களில் மிரட்டியும், அவதூறு பரப்பும் விதமாக பேசி வருகிறார் என்றும் இதை அவருடன் சேர்ந்து பலரும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை குறித்து வந்த போட்டோக்கள், மீம்ஸ்கள் என மொத்த ஆதாரத்தையும் ஸ்ரீகுமாருக்கு எதிராக கொடுத்தார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மஞ்சு வாரியர், ‘நான் சமூக வலைத்தளங்களில் பரவும் போலி பரப்புரைகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளேன். ஒடியன் படத்திற்கு பிறகே இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகுமார் என்னை குறித்து பல அவதூறுகளைப் பரப்புகிறார். அவர் எனக்கு எதிராக பல தீமைகளைச் செய்வார் என்று பயமாக உள்ளது’ என்றார். மேலும் அந்த புகாரில், ஒடியன் படப்பிடிப்பில் கேக் வெட்டும் போது அனைவர் முன்னிலையிலும் தன்னை அவமானமாக நடத்தினார் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த இயக்குநர் ஸ்ரீகுமார், ‘நான் என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்’ என்றார். இதையடுத்து மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீகுமார் மேனன் மீது வழக்குப்பதிவு செய்த திருச்சூர் கிழக்குப் போலீசார் இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் ஒடியன் படப்பிடிப்பில் கேக் வெட்டும் போது கலந்து கொண்ட, தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், தயாரிப்பு நிர்வாகி சாஜி சி ஜோசப், மஞ்சு வாரியரின் ஆடிட்டர் என் பலரின் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இன்னும் சில சாட்சியங்களிடமும் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.