‘அசுரன்’ படத்தில் பாஸ் மார்க் வாங்கி விட்டேன்: நடிகை மஞ்சு வாரியர் உற்சாகம்!
பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
அசுரன் படத்தில் திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசுவது சவாலாக இருந்ததாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அசுரன் திரைப்படம் குறித்து இணையதள ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள நடிகை மஞ்சு வாரியர், தமிழில் நான் தாமதமாக அறிமுகமாகவில்லை. தொடர்ந்து வாய்ப்புக்கள் வந்தன.ஆனால் அசுரன் கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. அதனால் உடனே சம்மதித்தேன். அசுரன் படத்தில் திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசி நடித்துள்ளேன்.
நான் தமிழகத்தில் பிறந்து 10 ஆண்டுகள் வளர்ந்தவள். அதனால் தமிழில் நன்றாக பேசுவேன். ஆனால் திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசுவது சவாலாக இருந்தது. இயக்குநர் வெற்றிமாறன் எனக்கு ஊக்கம் அளித்தார். அதனால் முயற்சி செய்து பார்த்தேன். எழுத்தாளர் சுகா எனக்கு பயிற்சி கொடுத்தார். நான் பலமுறை தவறு செய்த போதும், பொறுமையாகச் சொல்லிக்கொடுத்தார். இருந்தாலும் நான் 100% சிறப்பாகப் பேசினேன் என்று சொல்ல முடியாது. பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்’ என்றார்.