’மாஸ்டர்’ படம் நிறுத்தப்படுமா… அரசு விதிகளைக் கடைபிடிக்காத தியேட்டர்கள்?
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்ற ஆண்டு மார்ச் முதல் தியேட்டர் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறைய குறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு அவை இயங்குகின்றன.
தீபாவளி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் 50 சதவிகித இருக்கைகளை நிரப்பி, இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆயினும், காட்சிகளுக்கு இடையேயான இடைவெளி, வெப்ப நிலை சோதனை உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தியது.
இன்று வெளியாகியிருக்கும் மாஸ்டர் படத்திற்காக தமிழக அரசு 100 சதவிகித இருக்கைகளை நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்தது. ஆனால், மத்திய அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் அதை வாபஸ் பெற்றுக்கொண்டது. அதனால், இப்போதும் 50 சதவிகித இருக்கைகள் நிரப்ப மட்டுமே அனுமதி தமிழகத்தில் இருக்கிறது.
ஆனால், இன்று வெளியான மாஸ்டர் படத்தின் டிக்கெட்டுகள் 100 சதவிகிதம் விற்கப்பட்டதாகவும், ரசிகர்களைக் கட்டுப்பாடு இல்லாமல் அனுமதித்தாகவும் குற்றசாட்டுகள் பல இடங்களில் சொல்லப்படுகிறது. சென்னை காசி தியேட்டரில்100 சதவிகித இருக்கைகள் நிரப்பப்பட்டதாக அந்தத் தியேட்டருக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வசூலித்த டிக்கெட் தொகைக்கூட இது இருக்காது.
பல தியேட்டர்களிலும் அரசு வலியுறுத்தும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தியேட்டர் நிர்வாகம் காற்றில் பறக்க விட்டிருப்பதாகவே சமூக ஊடகத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால், விதிகளைக் கடுமையாகக் கடைபிடிக்க தியேட்டர்களுக்கு அரசு கட்டளை இட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இன்னொரு தரப்போ, விதிகளை கடைப்பிடிக்க மறுத்த தியேட்டர்களில் மாஸ்டர் படத்தை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இரண்டு கருத்துகளிலும் அப்படம் குறித்த விருப்பு, வெறுப்பு தாண்டி மக்கள் மீதான அக்கறை என்பதே மேலோங்கி இருக்கிறது. எனவே, இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கியப் பணியாகப் பார்க்கப்படும்.