மாணவர்கள் படிப்பு தொடர முயற்சி செய்யும் தமிழாசிரியை… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு
மாணவர்கள் வீட்டுக்கே சென்று மன அழுத்தம் தவிர்க்க ஆறுதல் கூறி வரும் பண்ருட்டி தமிழாசிரியை மகாலட்சுமிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டன. அரசுப் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன், இணைய இணைப்பு வசதி இல்லாத காரணத்தால் படிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுவீரப்பட்டு அரசுப் பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி மாணவர்களின் வீடு தேடிச் சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேசி வருகிறார். அவர்களுக்கு தொடர்ந்து படிக்க ஊக்கம் அளிப்பதுடன், அவர்களை வேலைக்கு அழைத்துச் சென்று படிப்பை நிறுத்திவிட வேண்டாம் என்று பெற்றோருக்கும் ஆலோசனை கூறி வருகிறார். இது தொடர்பான செய்தி தி இந்து நாளிதழில் வெளியானது.
பள்ளிகள் திறக்காத இந்நிலையில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்கள் படிப்பதற்கான வழிமுறைகளையும், மன அழுத்தம் தவிர்க்க ஆறுதலும் கூறி, பெற்றோர்களிடமும் அறிவுறுத்தி வரும் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசுப்பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி அவர்களின் செயல் நெகிழ்ச்சி அளிக்கிறது. pic.twitter.com/Iw7RAJrea5
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 30, 2020
இந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், “பள்ளிகள் திறக்காத இந்நிலையில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்கள் படிப்பதற்கான வழிமுறைகளையும், மன அழுத்தம் தவிர்க்க ஆறுதலும் கூறி, பெற்றோர்களிடமும் அறிவுறுத்தி வரும் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசுப்பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி அவர்களின் செயல் நெகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வீடுகளுக்கே தேடிச் செல்லும் தமிழாசிரியை மகாலட்சுமி அவர்களின் சேவைக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!” என்று தெரிவித்துள்ளார்.