மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா… சென்னையில் கொரோனா பாதிப்பு 17,598 ஆக உயர்வு!
தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவியுள்ள இடம் சென்னை தான். அங்கு கொரோனா பரவல் குறைவாகவே இருந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக சென்னையில் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்தது. குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், அண்ணா நகர், திரு.வி.க நகர் ஆகிய சென்னையின் முக்கியமான இடங்களில் அதிகமாக பரவியுள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது. இதனிடையே மக்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி தொடர்ந்து பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 3224 பேரும் , தண்டையார்பேட்டையில் 2093 பேரும் , திரு.வி.க நகரில் 1798 பேரும் , அண்ணா நகரில் 1525 பேரும் , தேனாம்பேட்டையில் 2014 பேரும் , கோடம்பாக்கத்தில் 2029 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 17,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டுமே 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.