நிலவில் திடீர் நில அதிர்வு...பதிவு செய்த விக்ரம் லேண்டர் - இஸ்ரோ பரபரப்பு தகவல்

 
moon

நிலவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனை விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள கருவி பதிவு செய்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்மான (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.  இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி மாலை 6.4 மணியளவில்  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து  நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.  பள்ளம் போன்ற தடைகள் இருந்தால், தாமாகவே பாதையை மாற்றி பக்குவமாக பயணித்து வருகிறது  ரோவர். நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. மேலும் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் உறுதி செய்துள்ளது.  


இந்த நிலையில், நிலவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனை விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள கருவி பதிவு செய்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி நிலவின் தென்துருவத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வை விக்ரம் லேண்டரின் ILSA எனும் கருவி பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியை போன்றே நிலவிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றனவா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.