மத்திய குழு இன்று சென்னை வருகை!
Dec 5, 2020, 08:07 IST1607135843000
தமிழகத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மதியம் சென்னை வருகிறது.
வங்கக்கடலில் கடந்த மாதம் உருவான நிவர் புயல் கடந்த 25ஆம் தேதி கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன. அப்போது தமிழக முதல்வரை தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக உறுதி அளித்தார். அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெருமளவு சேதமில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மதியம் சென்னை வருகிறது. டிசம்பர் 8ஆம் தேதி வரை தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.