அதிகரிக்கும் கொரோனா… டாஸ்மாக், தியேட்டரை மூட வேண்டும்!
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் பார், திரையரங்குகள், வழிபாட்டு தலங்களை மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “2020ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனாவின் தாக்கம் தணிந்து வந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 21ஆம் தேதி நிலவரப்படி 47 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரிக்கு பின் தொற்று பரவல் 4.5 மடங்கு அதிகரித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5.81 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளது. மாவட்ட அளவில் நிலைமையை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. ஆகவே தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க, டாஸ்மாக், பார்கள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், விளையாட்டு மைதானங்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.