பணப்பட்டுவாடா.. கையும் களவுமாக சிக்கிய ‘திமுக வழக்கறிஞர்’!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய ஆரம்பித்து விட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது. திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 8 காவல் நிலையங்களில், போலீசாரின் பெயர்களுடன் 50க்கும் மேற்பட்ட பண கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் திமுக தரப்பில் இருந்து காவலர்களின் தகுதிக்கு ஏற்றாற்போல ரூ.2000 முதல் 10 ஆயிரம் வரை பணம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்தது.
இதையடுத்து, பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அரசு மருத்துவமனை, தில்லை நகர் உள்ளிட்ட காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இந்த வழக்கை சிபிசிஐடிக்கும் மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மணிவண்ண பாரதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை கோட்டைவிட்ட திமுக, இந்த முறை தேர்தலில் வென்றுவிட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகளும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சொல்கின்றன. இப்படியிருக்கும் சூழலில், இது போன்ற பணப்பட்டுவாடா வழக்குகளில் சிக்குவது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் சிலர்…