ரேமண்ட் லாபம் ரூ.196 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.3 டிவிடெண்ட்..

 
ரேமண்ட்

ரேமண்ட் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.196.48 கோடி ஈட்டியுள்ளது. 

ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்பாளரான ரேமண்ட் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ரேமண்ட் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.196.48 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 25.84 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் ரேமண்ட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.264.97 கோடி ஈட்டியிருந்தது.

ரேமண்ட்

2023 மார்ச் காலாண்டில் ரேமண்ட் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,150.18 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 9.8 சதவீதம் அதிகமாகும். ரேமண்ட் நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,958.10 கோடி ஈட்டியிருந்தது. 2023 மார்ச் காலாண்டில் ரேமண்ட் நிறுவனத்தின் மொத்த செலவினம் 17.34 சதவீதம் உயர்ந்து ரூ.1,939.27 கோடியாக அதிகரித்துள்ளது.

ரேமண்ட்

ரேமண்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை  செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ரேமண்ட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.97 சதவீதம் குறைந்து ரூ.1,570.85ஆக இருந்தது.