முதல் 11 மாதங்களிலேயே ரூ.16 லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி. வசூல்..

இந்த நிதியாண்டில் கடந்த பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் ஜி..எஸ்.டி. வசூல் ரூ.16 லட்சம் கோடியை தாண்டி விட்டது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. 2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.11.36 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகி இருந்தது. கடந்த நிதியாண்டில் (2021 ஏப்ரல்-2022 மார்ச்) ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.14.87 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகி இருந்தது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது முதல் இதுவரையிலான காலத்தில் 13வது முறையாக மற்றும் தொடர்ந்து 12வது மாதமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 2023 பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,49,577 கோடி வசூலாகி உள்ளது. ஜி.எஸ்.டி. வரலாற்றில் 2022 ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,67,540 கோடி வசூலாகி இருந்தது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,49,577 கோடி வசூலாகியுள்ளது. இது 2022 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். கடந்த பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வசூலில், மத்திய ஜி.எஸ்.டி. வரி ரூ.27,662 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரி ரூ.34,915 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி ரூ.75,069 கோடியும் (இறக்குமதி பொருட்கள் மீதான வரி வசூல் ரூ.35,689 கோடி உள்பட), செஸ் ரூ.11,931 கோடியும் (இறக்குமதி பொருட்கள் மீதான வரி வசூல் ரூ.792 கோடி உள்பட) அடங்கும். இந்த நிதியாண்டில் கடந்த பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் ஜி..எஸ்.டி. வசூல் ரூ.16 லட்சம் கோடியை தாண்டி விட்டது.
மாதம் ஜி.எஸ்.டி. வருவாய்
2022
ஏப்ரல் ரூ.1,67,540 கோடி
மே ரூ.1,40,885 கோடி
ஜூன் ரூ.1,44,616 கோடி
ஜூலை ரூ.1,48,995 கோடி
ஆகஸ்ட் ரூ.1,43,612 கோடி
செப்டம்பர் ரூ.1,47,686 கோடி
அக்டோபர் ரூ.1,51,718 கோடி
நவம்பர் ரூ.1,45,867 கோடி
டிசம்பர் ரூ.1,49,507 கோடி
2023
ஜனவரி ரூ.1,55,922 கோடி
பிப்ரவரி ரூ.1,49,577 கோடி
மொத்தம் ரூ. 16,45,925 கோடி