கொரோனா ஊரடங்கு காலத்திலும் ரூ.5,024 கோடிக்கு தங்கம் இறக்குமதி
கடந்த மே மாதத்தில் ரூ.5,024 கோடிக்கு தங்கம் இறக்குமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்தவொரு குடும்ப விழாக்களிலும் தங்கம் பிரதானமாக இருக்கும். மஞ்சள் உலோகமான தங்கம் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. மேலும் இக்கட்டான நேரங்களில் நிதி தேவைக்கு கொடுக்கும் என்பதால்தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம்மவர்கள் வாங்குவது குறையுமே தவிர வாங்காமல் இருக்கமாட்டார்கள்.
அதேசமயம் நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவுக்கே நடைபெறுகிறது. இதனால் உள்நாட்டு தங்க தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதே அளவில் சீனாவுக்கு அடுத்து தங்கம் அதிகம் இறக்குமதி செய்யும் நாடு என்றால் அது நம் நாடுதான். கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் அந்த கடந்த மே மாதத்தில் தங்க நகைக்கடைகள் சரியாக திறக்கப்படவில்லை. இதனால் அந்த மாதத்தில் நம் நாட்டில் தங்கம் விற்பனை சுமாராக இருந்தது.
இருப்பினும் கடந்த மே மாதத்தில் ரூ.5,024 கோடிக்கு (67.90 கோடி டாலர்) தங்கம் இறக்குமதியாகி உள்ளது. அதேசமயம் 2020 மே மாதத்தில் ரூ.564 கோடி (7.63 கோடி டாலர்) அளவுக்குதான் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. திருமண காலத்தை மனதில் வைத்து தங்க வியாபாரிகள் தங்கம் இறக்குமதி செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.