பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லாபம் ரூ.6,478 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.4 டிவிடெண்ட்..

 
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

பி.பி.சி.எல். நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.6,478 கோடி  ஈட்டியுள்ளது. 

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.சி.எல். நிறுவனம்) தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பி.பி.சி.எல். நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.6,478 கோடி  ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 159 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பி.பி.சி.எல். நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.2,501 கோடி ஈட்டியிருந்தது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்

2023 மார்ச் காலாண்டில் பி.பி.சி.எல். நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1.33 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. 2022 மார்ச் காலாண்டில் பி.பி.சி.எல். நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1.23 லட்சம் கோடி ஈட்டியிருந்தது. 2023 மார்ச் காலாண்டில் பி.பி.சி.எல். நிறுவனத்தின் மொத்த செலவினம் 4 சதவீதம் உயர்ந்து ரூ.1.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2022 மார்ச் காலாண்டில் பி.பி.சி.எல். நிறுவனம் ரூ.1.19 லட்சம் கோடியை மொத்த செலவினமாக மேற்கொண்டு இருந்தது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

பி.பி.சி.எல். நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது பி.பி.சி.எல். நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.40 சதவீதம் உயர்ந்து ரூ.366.55ஆக இருந்தது.