வரலாறு காணாத அளவிற்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு.. ரூ. 81.18 ஆக கடும் வீழ்ச்சி..
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 81.18 காசுகளாக சரிவை கண்டுள்ளது. இதனால் இந்திய பங்குசந்தையும் கடும் சரிவை சந்தித்திருக்கிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதத்தை கடந்த 21ம் தேதி உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான பண மதிப்பு பல்வேறு நாடுகளில் சரிவை சந்தித்தது. கடந்த புதன்கிழமை அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் குறைந்து 79.96 காசுகளாக சரிந்த நிலையில், நேற்றைய தினம் சந்தை தொடக்கத்தின் போது 80. 27 ரூபாயாக இருந்தது. மேலும் நேற்றைய தினம் சந்தை முடிவடையும்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80.86 ரூபாயில் நிறைபெற்றது.
இந்நிலையில் இன்றும் ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை கண்டு வருகிறது. சந்தை தொடங்கியதும், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 39 காசுகள் குறைந்து 81.18 ஆக வீழ்ச்சியடைந்தது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவு என கூறப்படுகிறது. கடந்த 2013 இல் அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.62.10 ஆக இருந்தது. அதே 5 வருடங்கள் கழித்து 2018ல் 70. 55 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு, தற்போது ரூ. 81.18 ஆக உள்ளது. கிட்டத்தட்ட 9 வருடங்களில் மட்டும் 10.08 ரூபாய், 30.76% சரிவை கண்டுள்ளது.
ஆனால் 1947ம் ஆண்டு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூ.4.16 ஆக இருந்தது. 1947 முதல் 2013 (75 வருடங்கள்) வரையிலான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியின் அளவு 57.94 ரூபாய். அதாவது 13.93% ஆகும். ஆனால் 9 வருடங்களில் மட்டும் 30.21% சரிவை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வலராறு காணாத வீழ்ச்சியால், பங்குசந்தையிலும் கடும் சரிவு காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 58,493 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 175 புள்ளிகள் சரிந்து 17,453 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.