இன்று தொடங்குகிறது எல்.ஐ.சி பொது பங்கு விற்பனை.. ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டம்..
இன்று முதல் (மே 4-ம் தேதி) எல்.ஐ.சி-யின் பொது பங்கு விற்பனை தொடங்கவுள்ள நிலையில், ரூ. 21 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
65 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனமான எல்.ஐ.சி ரூ.39.6 லட்சம் கோடி மதிப்பிலான இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நிறுவனமாக இருந்து வருகிறது. கடந்த நிதியாண்டின் கணக்கின்படி இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கீழ் இருக்கும் சொத்துக்களை காட்டிலும், எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு 3.3 மடங்கு அதிகமாகும். அனைத்துத் தரப்பிரனும் எளிதில் அணுகும் படி, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த எல்.ஐ.சி., நிறுவனத்தில் உள்ள தன் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது.
அதன்படி அரசின் 5% பங்குகளை, அதாவது 31.6 கோடி பங்குகளை ஐஓபி மூலம் விற்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்காக எல்.ஐ.சி பங்கு விற்பனை வரைவு விண்ணப்பத்தை, கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அமைப்பிடம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த 5%பங்கு விற்பனை மூலம், 63 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று ( மே 4) முதல் மே 9 வரை எல் ஐ சியின் மெகா ஆரம்ப பொது பங்கு வெளியிடப்படுகிறது. இந்த ஆரம்ப பொது பங்கு வழங்கல் மூலம் LICயின் 3.5% பங்குகளை விற்பனை செய்து, ரூ. 21 ஆயிரம் கோடி நிதி திரட்டவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
அந்தவகையில் இன்று பொதுமக்கள், பாலிசிதாரர்கள், எல் ஐ,சி ஊழியர்களுக்கான பங்கு விற்பனை தொடங்குகிறது. ஒரு பொது பங்கின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாயும், சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.45 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஒதுக்கீட்டில் 16 பங்குகள் இருக்கும், அதன்படி ஒரு தனிநபர் 14 ஒதுக்கீடுகள் வரை விண்ணப்பிகலாம் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த திங்கள் கிழமை பெரிய முதலீட்டாளர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 2 நாட்களில் ரூ. 5,620 கோடிக்கு பங்குகள் வாங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.