5 தினங்களில் சென்செக்ஸ் 772 புள்ளிகள் உயர்ந்தது... முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி லாபம்..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வா்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. 5 தினங்களில் சென்செக்ஸ் 772 புள்ளிகள் உயர்ந்தது.


இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த புதன்கிழமையை தவிர்த்து மற்ற நான்கு தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது, நிறுவனங்களின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள், அமெரிக்க கடன் உச்ச வரம்பு பேச்சுவார்த்தையில் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

காலாண்டு நிதி நிலை முடிவுகள்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.282.61 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (மே 19) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.276.59 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.02 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

கச்சா எண்ணெய்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்று முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 772.01 புள்ளிகள் உயர்ந்து 62,501.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 295.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,499.35 புள்ளிகளில் முடிவுற்றது.