தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 298 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 298 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.  அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தை நிலவரம் எதிர்மறையாக இருந்தது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா மோட்டார்ஸ் மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி. மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டைட்டன்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,641  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,808  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 146 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.276.59 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ. 77 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 297.94 புள்ளிகள் உயர்ந்து 61,729.68 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 73.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,203.40 புள்ளிகளில் முடிவுற்றது.