பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு... சென்செக்ஸ் 372 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 372 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் கடந்த செவ்வாய்க்கிழமை சரிவுடன் முடிவடைந்தது, அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வட்டி வருவாய் 6 சதவீதம் அதிகரிப்பு.. கோடக் மகிந்திரா வங்கி லாபம் ரூ.1,642 கோடி…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,712  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,779  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 134 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.277.22 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ. 89 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 371.83 புள்ளிகள் குறைந்து 61,560.64 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 104.75 புள்ளிகள் சரிவு கண்டு 18,181.75 புள்ளிகளில் முடிவுற்றது.