பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு.. சென்செக்ஸ் 502 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 502 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்காவில் அதிக வட்டி விகிதம் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்ற அச்சம், சர்வதேச  பங்குச் சந்தைகளில் சரிவின் தாக்கம் போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி சுசுகி இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,581  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,876  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 143 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.260.93 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.95 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 501.73 புள்ளிகள் குறைந்து 58,909.35 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 129.00 புள்ளிகள் சரிவு கண்டு 17,321.90 புள்ளிகளில் முடிவுற்றது.