பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு.. சென்செக்ஸ் 338 புள்ளிகள் குறைந்தது..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 338 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அமெரிக்க வங்கிகள் திவால் போன்ற சர்வதேச  நிலவரங்களால் பங்கு வர்த்தகம் படிப்படியாக சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன் மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

3 மாதத்தில் ரூ.357 கோடி லாபம் ஈட்டிய பிரபல வாட்ச் நிறுவனமான டைட்டன்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,184  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,341  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 105 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.256.53 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.18 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 337.66 புள்ளிகள் குறைந்து 57,900.19 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 111.00 புள்ளிகள் சரிவு கண்டு 17,043.30 புள்ளிகளில் முடிவுற்றது.