பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு.. சென்செக்ஸ் 671 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 671 புள்ளிகள் குறைந்தது.

சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாதது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுசுகி உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ்  நிறுவன பங்கின் விலை மாற்றம் இன்றி முடிவடைந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் எஸ்.பி.ஐ. உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டாடா மோட்டார்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,410  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,096  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 105 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.262.60 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.70 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 671.15 புள்ளிகள் குறைந்து 59,135.13 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 176.70 புள்ளிகள் சரிவு கண்டு 17,412.90 புள்ளிகளில் முடிவுற்றது.