பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு... சென்செக்ஸ் 187 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 187 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் பலகீனமாக இருந்தது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி உயர்வு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு போன்ற வெளிகாரணிகள் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் பவர்கிரிட் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஏசியன்  பெயிண்ட்ஸ் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1512 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,002 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 112 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.83 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.88 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 187.31 புள்ளிகள் குறைந்து 60,858.43 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 57.50 புள்ளிகள்  சரிவு கண்டு 18,107.85 புள்ளிகளில் முடிவுற்றது.