பங்குச் சந்தைகளில் தொடரும் ஏற்றம்... சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்வு..

 
 பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்தது.

அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் முதலீடு செய்ய தொடங்கியிருப்பது மற்றும் சாதகமான பொருளாதாதர புள்ளிவிவங்கள் போன்றவற்றால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் எல் அண்ட் டி உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில்,  டாடா மோட்டார்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,942 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,572 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 135 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.282.71 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.82 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 390.02 புள்ளிகள் உயர்ந்து 61,045.74 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 112.05 புள்ளிகள்  ஏற்றம் கண்டு 18,165.35 புள்ளிகளில் முடிவுற்றது.