சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 563 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 563 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த டிசம்பரில் மொத்த விலை பணவீக்கம் குறைந்தது, கச்சா எண்ணெய் மீதான விண்ட்பால் வரியை மத்திய அரசு குறைத்தது, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எல் அண்ட் டி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

எல் அண்ட் டி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,713 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,784 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 147 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.89 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.21 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 562.75 புள்ளிகள் உயர்ந்து 60,655.72 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 158.45 புள்ளிகள்  ஏற்றம் கண்டு 18,053.30 புள்ளிகளில் முடிவுற்றது.