தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்... சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 2 மாதமாக கடந்த டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது, கடந்த நவம்பர் மாத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கண்டது, அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை  குறைந்தது.

வட்டி வருவாய் அமோகம்.. இண்டஸ்இந்த் வங்கி லாபம் 190 சதவீதம் வளர்ச்சி..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,995 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,487 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 152 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.17 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.24 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 303.15 புள்ளிகள் உயர்ந்து 60,261.18 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 98.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,956.60 புள்ளிகளில் முடிவுற்றது.