தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்கும் முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 139 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில்  இன்றும் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 139 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு மைய வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் எல் அண்ட் டி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,584  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,861  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.260.88 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.55 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 139.18 புள்ளிகள் குறைந்து 59,605.80 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 43.05 புள்ளிகள் சரிவு கண்டு 17,511.25 புள்ளிகளில் முடிவுற்றது.