தொடர்ந்து 3வது நாளாக பங்குச் சந்தைகளில் ஏற்றம்.. சென்செக்ஸ் 11 புள்ளிகள் உயர்வு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. சென்செக்ஸ் 11 புள்ளிகள் உயர்ந்தது.

பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது பங்கு வர்த்தகத்தின் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர் கிரிட் மற்றும் எஸ்.பி.ஐ. உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

குவிந்தது வருவாய்… ரூ.3,368 கோடியை லாபமாக அள்ளிய பவர் கிரிட்..
 
மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,305  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,340  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 145 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.310.30 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.28 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்களை கை விடாத பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம்….

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 11.43 புள்ளிகள் உயர்ந்து 65,087.25 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 4.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 19,347.45 புள்ளிகளில் முடிவுற்றது.