இந்த வார பங்கு வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 990 புள்ளிகள் உயர்ந்தது..

 
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 990 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 தினங்களை தவிர்த்து மற்ற 3 வர்த்தக தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி உயர்வு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, அமெரிக்க பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கச்சா எண்ணெய்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.283.00 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 2) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.278.41  லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.59 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 989.81 புள்ளிகள் உயர்ந்து 59,793.14 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 293.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,833.35 புள்ளிகளில் முடிவுற்றது.