வர்த்தக துளிகள்... வாரத்துக்கு 3 நாள் அலுவலகத்துக்கு வந்து வேலை பாருங்க- ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய டி.சி.எஸ்.
நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது அலுவலகத்தில் இருந்து பணிபுரிவது கட்டாயம் என மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நம்முடன் சேர்ந்துள்ள கணிசமான எண்ணிக்கையிலான புதிய சகாக்களை வரவேற்கும் வாய்ப்பாகவும் இது இருக்கும் என்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தெரிவித்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில், கடந்த சில மாதங்களில் கோழி தீவனத்தில் பயன்படுத்தப்படும் குருணை அரிசி ஏற்றுமதி அதிகரித்ததால் உள்நாட்டு சந்தையில் நெருக்கடியை ஏற்படுத்தியது அதனால்தான் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. கோதுமை விஷயத்தில் உணவு பாதுகாப்பு கவலைகள் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அவசியமாக்கியது. இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை என்றும் தொடர் கண்காணிப்பில் உள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
குறைந்த விமான கட்டண சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அக்டோபர் முதல் விமானிகளுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த வாரம் அவசர கடன் லைன் உத்தரவாத திட்டத்தின் (இ.சி.எல்.ஜி.எஸ்.) முதல் தவணையாக சுமார் ரூ.125 கோடி பெற்றதாக கூறப்படுகிறது.
கனடாவை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் டாப் 10 இ காமர்ஸ் உணவு விநியோக நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் ஸ்விகி மற்றும் ஜோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் சீனாவின் உணவு தளமான மெட்வான் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் டெலிலிவெர்ரோ மற்றும் அமெரிக்காவின் உபேர் ஈட்ஸ் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.