பங்குச் சந்தைகளில் காளையின் ஆதிக்கம்... 5 தினங்களில் சென்செக்ஸ் 345 புள்ளிகள் உயர்வு..

 
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 345 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. அதேசமயம் கடந்த புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் பங்கு வர்த்தகம் எழுச்சி கண்டது. இந்தியாவின் கடந்த டிசம்பர் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்தது, ஜனவரி மாத முக்கிய 8 துறைகள் உற்பத்தி அதிகரிப்பு,  அமெரிக்காவின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் நேர்மறையாக இருந்தது, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு நடவடிக்கை தொடர்பான எதிர்பார்ப்பு, அதானி குழும நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டு நிறுவனம் முதலீடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

அதானி

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.263.40  லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய வார வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 24) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.260.00 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.40 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

அமெரிக்க பெடரல் வங்கி
 
நம் நாட்டு பங்குச் சந்தைகளில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 345.04 புள்ளிகள் உயர்ந்து  59,808.97 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 128.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,594.35 புள்ளிகளில் முடிவுற்றது.