தொடர்ந்து 3வது நாளாக பங்குச் சந்தைகளில் உற்சாகம்... சென்செக்ஸ் 712 புள்ளிகள் அதிகரிப்பு

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 712 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது, முன்னணி நிறுவனங்களின் கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் சன் பார்மா உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாக்டர்ரெட்டீஸ் மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை  குறைந்தது.

சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,103 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,224 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 144 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.266.57 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.3.47 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 712.46 புள்ளிகள் உயர்ந்து 57,570.25 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 228.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,158.25 புள்ளிகளில் முடிவுற்றது.