5 தினங்களில் சென்செக்ஸ் 721 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.34 ஆயிரம் கோடி லாபம்..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 721 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் நேற்று வரையிலான கடந்த 4 வர்த்தக தினங்களிலும் பங்கு வர்த்தகம் தொடர் சரிவை சந்தித்தது. இன்று மட்டும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் அதிகமாக இருப்பது, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க பெடரல் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.251.92 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 8) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.251.58 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் .முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 721.06 புள்ளிகள் குறைந்து 53,760.78 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 171.40 புள்ளிகள் சரிவு கண்டு 16,049.20 புள்ளிகளில் முடிவுற்றது.