தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 345 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 345 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு கண்ட போதிலும், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

விளம்பர செலவினம் அதிரடி குறைப்பு…. ரூ.1,881 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,784 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,502 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 148 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.251.92 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.24 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.63 புள்ளிகள் உயர்ந்து 53,760.78 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 110.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,049.20 புள்ளிகளில் முடிவுற்றது.