தொடர்ந்து 4வது நாளாக பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 98 புள்ளிகள் சரிவு..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 98  புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தகத்தின் இடையே வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா மற்றும் டாக்டர்ரெட்டீஸ் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,383 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,939 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 140 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.250.68 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.39 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. 

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 98.00 புள்ளிகள் குறைந்து 53,416.15 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 28.00 புள்ளிகள் சரிவு கண்டு 15,938.65 புள்ளிகளில் முடிவுற்றது.