தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு... சென்செக்ஸ் 10 புள்ளிகள் குறைந்தது..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 10 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்க நுகர்வோர் விலை குறித்த எதிர்பார்ப்பு, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயா்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இந்துஸ்தான் யூனிலீவர் தயாரிப்புகள்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,867 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,626 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 148 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.33லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 9.98 புள்ளிகள் குறைந்து 60,105.50 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 18.45 புள்ளிகள் சரிவு கண்டு 17,895.70 புள்ளிகளில் முடிவுற்றது.