பங்குச் சந்தைகளில் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 632 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 632 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

டி.சி.எஸ். நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்புகளை காட்டிலும் குறைவாக இருந்தது, அமெரிக்க பெடரல் வங்கி அதிகாரிகளின் தீவிரமான கருத்துக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா மோட்டார்ஸ் மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல் மற்றும் எஸ்.பி.ஐ. உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,427 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,094 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 133 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.83லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.2.10 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 631.83 புள்ளிகள் குறைந்து 60,115.48 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 187.05 புள்ளிகள் சரிவு கண்டு 17,914.15 புள்ளிகளில் முடிவுற்றது.