5 தினங்களில் சென்செக்ஸ் 818 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.4.69 லட்சம் கோடி லாபம்..

 
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 818 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் நேற்றைய தினத்தை தவிர்த்து மற்ற 4 தினங்களிலும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. வாகன நிறுவனங்களின் கடந்த ஜூலை மாத வாகன விற்பனை, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம், அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குகளை வாங்கி குவிக்க தொடங்கியது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்தது.

இந்திய ரிசர்வ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.271.26 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 29 ) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.266.57  லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.69 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 817.68 புள்ளிகள் உயர்ந்து 58,387.93 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 239.25 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,397.50 புள்ளிகளில் முடிவுற்றது.