பங்குச் சந்தையில் காளையின் ஆட்டம்.. சென்செக்ஸ் 702 புள்ளிகள் உயர்வு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 702 புள்ளிகள் உயர்ந்தது.


இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பார்தி ஏர்டெல்
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,660 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,750 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 108 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.269.47 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.48 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 701.67 புள்ளிகள் உயர்ந்து 57,521.06 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 206.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,245.05 புள்ளிகளில் முடிவுற்றது.