தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,689 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,754 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 128 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.283.00 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.29 ஆயிரம்  கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.92 புள்ளிகள் உயர்ந்து 59,793.14 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 34.60 புள்ளிகள் உயர்வு கண்டு 17,833.35 புள்ளிகளில் முடிவுற்றது.