தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு.. சென்செக்ஸ் 168 புள்ளிகள் குறைந்தது..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 168  புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்காவின்  பொருளாதார புள்ளிவிவரங்கள் வலுவாக இருந்தது, அமெரிக்க பெடரல் வங்கி எந்த நேரத்திலும் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு, சர்வதேச பங்குச் சந்தை நிலவரம் போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,131 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,323 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 125 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.90 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.55 ஆயிரம்  கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 168.08 புள்ளிகள் குறைந்து 59,028.91 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 31.20 புள்ளிகள் சரிவு கண்டு 17,624.40 புள்ளிகளில் முடிவுற்றது.