பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகம்... சென்செக்ஸ் 49 புள்ளிகள் குறைந்தது..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தகதியில் இருந்தது. சென்செக்ஸ் 49 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறு சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,789 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,665 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 134 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.35 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.54 ஆயிரம்  கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 48.99 புள்ளிகள் குறைந்து 59,196.99 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 10.20 புள்ளிகள் சரிவு கண்டு 17,655.60 புள்ளிகளில் முடிவுற்றது.