பங்குச் சந்தைகளில் விறுவிறுப்பான வர்த்தகம்.. சென்செக்ஸ் 456 புள்ளிகள் உயர்ந்தது..

 
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 456 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது பங்குச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டி.சி.எஸ். மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வட்டி வருவாய் அமோகம்.. இண்டஸ்இந்த் வங்கி லாபம் 190 சதவீதம் வளர்ச்சி..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,862 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,635 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 103 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.286.72 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.44 லட்சம் கோடி  கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 455.95 புள்ளிகள் உயர்ந்து 60,571.08 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 133.70 புள்ளிகள் உயர்வு கண்டு 18,070.05 புள்ளிகளில் முடிவுற்றது.