பங்குச் சந்தைகளில் பலத்த அடி.. சென்செக்ஸ் 770 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 770 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் சரிவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தகத்தின் இடையே குறைந்தது, மத்திய அரசு டீசல் மீதான ஏற்றுமதி வரி மற்றும் உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான வரியை உயர்த்தியது, கடந்த ஜூன் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்ப்புகளை காட்டிலும் குறைவாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் ஏசியன்பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,954  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,470 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.278.78 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.43 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 770.48 புள்ளிகள் குறைந்து 58,766.59 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 216.50 புள்ளிகள் சரிவு கண்டு 17,542.80 புள்ளிகளில் முடிவுற்றது.