இந்த வாரம் பங்குச் சந்தைகளில் காளையின் ஆதிக்கம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 991 புள்ளிகள் உயர்வு..

 
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. 5 தினங்களில் சென்செக்ஸ் 991 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 தினங்களை தவிர்த்து மற்ற 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கடந்த அக்டோபர் மாத விற்பனை, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வெளிச்சந்தை கூட்டம், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு, முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்தன.

அமெரிக்க பெடரல் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.283.01 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 28) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.276.89   லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.12 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 990.51 புள்ளிகள் உயர்ந்து 60,950.36 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 330.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,117.15 புள்ளிகளில் முடிவுற்றது.