சரிவிலிருந்து மீண்ட பங்கு சந்தைகள்... சென்செக்ஸ் 114 புள்ளிகள் அதிகரிப்பு

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்தது.


அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருவது, முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

அல்ட்ராடெக் சிமெண்ட்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,031  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,414  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 140 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.283.01 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.1.43 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 113.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 60,950.36 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 64.45 புள்ளிகள் உயர்ந்து 18,117.15 புள்ளிகளில் முடிவுற்றது.